Thursday, July 4, 2019

கொன்றை சூடியவன்

பாதையெங்கும் விரவிக் கிடக்கும்
சரக்கொன்றை பூக்களை
வலிக்கும் மனதோடு 
கூட்டிக்கூட்டிக் குவிக்கிறார்
துப்பறவுப் பணியாளர்
சின்னச்சின்ன இடைவெளிகளில் 
புதிது புதிதாய் தோன்றுகின்றன
மஞ்சள் பூக் குன்றங்கள்.
சன்னமாய் வீசும் காற்றில்
கலைந்து பறக்கின்றன
கோபுரங்களின் தங்கக் கலசங்கள்.
சிலிர்த்து உதிர்க்கிறது மரம்
மேலும் பல கொன்றைகளை
தரையெங்கும்  பணியாளர் தலை மீதும்.
 
 -- சுரேஷ் பரதன். 

Wednesday, July 14, 2010

மனைவி வேலைக்குப் போய்விட்டாள் ... ( வேறு ஊருக்கு ... )

உறவுகளின் அருகாமையின்மையும்

தொலைபேசியின் அழைப்பு மணியின்

நெடுங்கால மௌனமும்

அந்தகார பெருஞ்சுழிக்குள்

அழுத்திவிடுகின்றன ...

ட்விட்ஸ் இல்லாமல் கழிகின்றன

இருபத்தியொரு நாட்கள்... !

ஓட்டுக்குள் சுருங்கின

நத்தையாய் நகர்கின்றது

வாழ்க்கை ... !

Friday, December 26, 2008

காணாமல் போன கனவுகள்

கனவுகள் காணாமல் போகும்
காலைப் பொழுது.
நித்திரை தேவி
முத்திரை பதித்த
இரவுப் பொழுது
இறந்து போன
காலைப் பொழுது.

கண்களுக்கும் தூக்கத்திற்கும்
எலும்புகளுக்கும் சோம்பலுக்குமுள்ள
உறவை முறித்து
என் உறவை நினைத்தேன்.

இன்று எனக்கு ஒரு பொன்னாள்.
ஆம்! இன்று அவள்
பதிலுரைக்கப் போகிறாள்.
நான் வரைந்த
காதல் ஓலைக்கு
இன்று அவள்
பதிலுரைக்கப் போகிறாள்.

அவள் கண்களின்
கர்ப்பத்தில்
காத்திருந்த காதல்
இன்று
பிரவசத்திற்கு தயாராய்.!
நான் இனி
கனவுகளுக்கு மட்டுமே
சொந்தக்காரன்.!
இன்பக் கனவுகளுக்கு மட்டுமே
சொந்தக்காரன்.!

என் கற்பனைக்
குழந்தைகள்
குதிரைகளாய் மாறி
குளம்பு பதித்து ஓட
அதில்
வாள் சுழற்றி வீரம் காட்டும்
பிருதிவியாய் நான்!
சாலையோரம் சலனமின்றி
சம்யுக்தையாய் அவள்.!

கல்லெறிந்தவர் முன்
கழண்டு போக
கள்வர்களில்லை நாங்கள் ...
காதலர்கள்.!
இனி காயங்களும்
எங்களுக்கில்லை
எம்மை தடுப்பவர்க்கே!

இனி
கனவுகளுக்கு மட்டுமே
நாங்கள் சொந்தக்காரர்கள்.!
இன்பக் கனவுகளுக்கு மட்டுமே
சொந்தக்காரர்கள்!

கனவுகளும் கவிதைகளும்
கண்களில் மின்ன
கன்னியின் வரவுக்கு
பதைத்தது நெஞ்சம்.

பதைத்து வந்தவள்
விதைத்த வார்த்தைகள்
வதைத்த வேகத்தில்
சிதைந்தது உள்ளம்.

நான் இனி
கனவுகளுக்கு மட்டுமே
சொந்தக்காரன்.!
காணாமல் போன
கனவுகளுக்கு மட்டுமே
சொந்தக்காரன்.!

Tuesday, August 19, 2008

வயது வந்தும் வயதுக்கு வராதவள்.

எல்லா மரங்களும்
வஸந்தத்தால்
வாழ்த்தப் பட்ட போது
ஏன் இந்த மரம் மட்டும்
இத்தனை வஞ்சிக்கப் பட்டது...!?!?

இந்த வருடத்திற்கு மட்டும்
ஏன
டிசம்பரில் இத்தனை
நாட்கள்..!?!
பூக்களெல்லாம்
பூபாளக் கச்சேரி செய்ய
பணிக்கப் பட்ட போது ..
ஏன்
இந்த மொட்டு மட்டும்
ஆதங்க ஆவர்த்தனம் பண்ண
சபிக்கப் பட்டது .. !?!?!

எல்லா நார்களுக்கும்
பூக்கள் ஒதுக்கப் பட்டபோது
ஏன்
இந்த நாரில் மட்டும்
முட்கள் தொடுக்கப் பட்டது ... !?!?!

எல்லா கண்களின்
கண்ணீரையும்
ஆனந்தம் வந்து
அழிவித்த போது
ஏன்
இந்த கண்களில் மட்டும்
சோகம்
சுமையிறக்கிவிட்டுப் போனது .. !?!?!
சித்திரை மலர்களெல்லாம்
டிசம்பரிலேயே மலரும்போது
இந்த டிசம்பர் மலர் மட்டும்
சித்திரை பல வந்தும்
ஏன்
மலரவில்லை...!?!?!
எல்லா பயிரகளும்
பருவத்தே பயிரான போது
இந்த பயிருக்கு மட்டும்
ஏன்
பருவம் வரவேயில்லை...!?!?!?!

கவிதை வேதம்.

புவி பார்த்து விழி புணரும்;
மனதில் நுழைந்து கருவாய் தங்கும்;
உயிரின் வாசல் கவிதை பிரசவிக்கும்;
புவி கேட்டு பரவச மடையும்;
கவிதை புரியாதோர் கல்வி யிலாதோர்;
அகம் புரியாது புறம் பேசும்
அகந்தை கொண்ட அறிவிலி மாந்தர்
மனதில் அறைய பிறந்த கவிதை
உலகம் பேச உன்னதம் ஆகும்;
வரி வடிவில் வாழ்ந்து நிற்கும்;
வானம் வந்து வாழ்த்திச் செல்லும்;
வாழ்க்கை வந்து வழக்கை சொல்லும்
பேனா நிமிர்ந்து தீர்ப்பை எழுதும்;
அகந்தை தாங்கும் அறிவிலிக் கூட்டம்
வார்த்தை முன்னே வலு விழக்கும்;
வார்த்தை முன்னே வலு விழந்தோர்
வாழ்க்கை முன்னா நிற்கக் கூடும்.. ?
தீர்ப்பைச் சொல்லும் சிறந்த கவிதை
அரசில் ஏறி ஆட்சி செய்யும்;
செவ்வேல் தாங்கி இராட்சசம் அழிக்கும்;
மனிதம் சிறக்க சிலுவை சுமக்கும்;
குற்றம் தவிர்க்கும் குரானாய் நிற்கும்;
கவிதை புரியும் செந்நிலை அரசில்
மதங்க ளில்லை குலங்க ளில்லை;
மானுடம் மட்டும் மகத்துவ மாகும்;
மானுடம் வாழ வாழ்ந்திடும் கவிதை
நாளைய உலகின் வேதம் வேதம்!

Tuesday, July 15, 2008

ஏழை பாரதி

காக்கைக் குருவி எங்கள் ஜாதியடி
பாரதியைக் கற்றுத் தந்தாள் – அந்தப்
பள்ளி ஆசிரியை.
ஏனோ புரியவில்லை
ஏழைச் சிறுவனுக்கு.
விட்டுவிட்டு வீட்டிற்க்கு
வந்தான்
பசித்து வந்தவனுக்கோ
பரிமாறப் பட்டதென்னவோ
பருக்கைகள் மட்டுமே!
புரிந்து கொண்டான் அவன் பாரதியை!
உண்ணும் அளவு ஒன்று
என்பதினால் தானோ அன்று
பாரதி சொன்னான்
காக்கைக் குருவி எங்கள் ஜாதியென்று.!

வாக்காளர்கள்.

பசித்த நேரத்தில்
மட்டுமே வந்து போகும்
நாத்திக பக்தர்களுக்கு
இரத்தின கம்பளம்
விரித்து வரவேற்கும்
கோயில்கள்.

கஷ்டம் தெரிந்தும்
கூடலை இரந்து
கருவைப் பெற்ற
கர்ப்பப்பைகள்.
பிறந்தவன்
நர(க) அசுரன்
என்று தெரிந்திருந்தும்
பூரித்துப் போகும்
பூமா தேவிகள்.!


கிழித்த இடத்தில்
வழிந்த இரத்தம்
விழியில் பட்டு
சிவந்து போனால்
சிம்மாசனம் தூளெனப்
புரிந்த ஊசி
விழியோடு இமையைத்
தைத்த போதும்
சுகித்துக் கொண்டிருக்கும்
சுக போகிகள்.

கண்ணைத் தைத்தவன்
கடவுள் என்று
கோயில் கட்டும்
பெரிய சோழர்கள்!