Tuesday, May 27, 2008

நீங்கா நினைவுகள்.

உனக்கு ஞாபகம் உண்டா .. ?

முன்னும் பின்னுமறியாது
முழுக்க முழுக்கவொரு
புதுவுலகில்
என்னையும்
தொடர்பாய் உன்னையும்
அழுத்தி வைத்த – அந்த
அலுவலக நாட்கள் ...

அலுவலகம் முடிந்து
அவரவர் தான் நீங்க
நீயும் நானும்
எவையெவையோயெல்லாம்
பேசித் தீர்க்க நினைத்த
ஐ.நா பிரச்சனைகள் –

நேரில் பேச முடியாத போதெல்லாம்
தாளில் பேச – பின்னும்
தாளாப் பிரச்சனைகளில்
நம்மை அழுத்திக் கொண்ட – அந்த
அழுத்தமான நாட்கள் ...

இவையெல்லாம்
இன்னும் நினைவில் – இந்த
ஐம்பதாம் வயதிலும் ...!

இப்போது நீ
வந்தால்...
உன்னால்
என்னை அடையாளம்
கொள்ள முடியுமா... ?

மங்கிய விழிகளும் - அதனை
மறைக்கத் துடிக்கும்
மூக்குக் கண்ணாடியும்
நரைத்த முடிகளும்
நைந்து போன நரம்புகளும் -

வயோதிகத்தின் விளிம்பில்
மரணத்தை எதிர்நோக்கி
வாசலில் நின்ற போதும்
நீங்காதிருப்பவை – இன்னும்
நினைவுகள் மட்டுமே...!

No comments: