Friday, December 26, 2008

காணாமல் போன கனவுகள்

கனவுகள் காணாமல் போகும்
காலைப் பொழுது.
நித்திரை தேவி
முத்திரை பதித்த
இரவுப் பொழுது
இறந்து போன
காலைப் பொழுது.

கண்களுக்கும் தூக்கத்திற்கும்
எலும்புகளுக்கும் சோம்பலுக்குமுள்ள
உறவை முறித்து
என் உறவை நினைத்தேன்.

இன்று எனக்கு ஒரு பொன்னாள்.
ஆம்! இன்று அவள்
பதிலுரைக்கப் போகிறாள்.
நான் வரைந்த
காதல் ஓலைக்கு
இன்று அவள்
பதிலுரைக்கப் போகிறாள்.

அவள் கண்களின்
கர்ப்பத்தில்
காத்திருந்த காதல்
இன்று
பிரவசத்திற்கு தயாராய்.!
நான் இனி
கனவுகளுக்கு மட்டுமே
சொந்தக்காரன்.!
இன்பக் கனவுகளுக்கு மட்டுமே
சொந்தக்காரன்.!

என் கற்பனைக்
குழந்தைகள்
குதிரைகளாய் மாறி
குளம்பு பதித்து ஓட
அதில்
வாள் சுழற்றி வீரம் காட்டும்
பிருதிவியாய் நான்!
சாலையோரம் சலனமின்றி
சம்யுக்தையாய் அவள்.!

கல்லெறிந்தவர் முன்
கழண்டு போக
கள்வர்களில்லை நாங்கள் ...
காதலர்கள்.!
இனி காயங்களும்
எங்களுக்கில்லை
எம்மை தடுப்பவர்க்கே!

இனி
கனவுகளுக்கு மட்டுமே
நாங்கள் சொந்தக்காரர்கள்.!
இன்பக் கனவுகளுக்கு மட்டுமே
சொந்தக்காரர்கள்!

கனவுகளும் கவிதைகளும்
கண்களில் மின்ன
கன்னியின் வரவுக்கு
பதைத்தது நெஞ்சம்.

பதைத்து வந்தவள்
விதைத்த வார்த்தைகள்
வதைத்த வேகத்தில்
சிதைந்தது உள்ளம்.

நான் இனி
கனவுகளுக்கு மட்டுமே
சொந்தக்காரன்.!
காணாமல் போன
கனவுகளுக்கு மட்டுமே
சொந்தக்காரன்.!

Tuesday, August 19, 2008

வயது வந்தும் வயதுக்கு வராதவள்.

எல்லா மரங்களும்
வஸந்தத்தால்
வாழ்த்தப் பட்ட போது
ஏன் இந்த மரம் மட்டும்
இத்தனை வஞ்சிக்கப் பட்டது...!?!?

இந்த வருடத்திற்கு மட்டும்
ஏன
டிசம்பரில் இத்தனை
நாட்கள்..!?!
பூக்களெல்லாம்
பூபாளக் கச்சேரி செய்ய
பணிக்கப் பட்ட போது ..
ஏன்
இந்த மொட்டு மட்டும்
ஆதங்க ஆவர்த்தனம் பண்ண
சபிக்கப் பட்டது .. !?!?!

எல்லா நார்களுக்கும்
பூக்கள் ஒதுக்கப் பட்டபோது
ஏன்
இந்த நாரில் மட்டும்
முட்கள் தொடுக்கப் பட்டது ... !?!?!

எல்லா கண்களின்
கண்ணீரையும்
ஆனந்தம் வந்து
அழிவித்த போது
ஏன்
இந்த கண்களில் மட்டும்
சோகம்
சுமையிறக்கிவிட்டுப் போனது .. !?!?!
சித்திரை மலர்களெல்லாம்
டிசம்பரிலேயே மலரும்போது
இந்த டிசம்பர் மலர் மட்டும்
சித்திரை பல வந்தும்
ஏன்
மலரவில்லை...!?!?!
எல்லா பயிரகளும்
பருவத்தே பயிரான போது
இந்த பயிருக்கு மட்டும்
ஏன்
பருவம் வரவேயில்லை...!?!?!?!

கவிதை வேதம்.

புவி பார்த்து விழி புணரும்;
மனதில் நுழைந்து கருவாய் தங்கும்;
உயிரின் வாசல் கவிதை பிரசவிக்கும்;
புவி கேட்டு பரவச மடையும்;
கவிதை புரியாதோர் கல்வி யிலாதோர்;
அகம் புரியாது புறம் பேசும்
அகந்தை கொண்ட அறிவிலி மாந்தர்
மனதில் அறைய பிறந்த கவிதை
உலகம் பேச உன்னதம் ஆகும்;
வரி வடிவில் வாழ்ந்து நிற்கும்;
வானம் வந்து வாழ்த்திச் செல்லும்;
வாழ்க்கை வந்து வழக்கை சொல்லும்
பேனா நிமிர்ந்து தீர்ப்பை எழுதும்;
அகந்தை தாங்கும் அறிவிலிக் கூட்டம்
வார்த்தை முன்னே வலு விழக்கும்;
வார்த்தை முன்னே வலு விழந்தோர்
வாழ்க்கை முன்னா நிற்கக் கூடும்.. ?
தீர்ப்பைச் சொல்லும் சிறந்த கவிதை
அரசில் ஏறி ஆட்சி செய்யும்;
செவ்வேல் தாங்கி இராட்சசம் அழிக்கும்;
மனிதம் சிறக்க சிலுவை சுமக்கும்;
குற்றம் தவிர்க்கும் குரானாய் நிற்கும்;
கவிதை புரியும் செந்நிலை அரசில்
மதங்க ளில்லை குலங்க ளில்லை;
மானுடம் மட்டும் மகத்துவ மாகும்;
மானுடம் வாழ வாழ்ந்திடும் கவிதை
நாளைய உலகின் வேதம் வேதம்!

Tuesday, July 15, 2008

ஏழை பாரதி

காக்கைக் குருவி எங்கள் ஜாதியடி
பாரதியைக் கற்றுத் தந்தாள் – அந்தப்
பள்ளி ஆசிரியை.
ஏனோ புரியவில்லை
ஏழைச் சிறுவனுக்கு.
விட்டுவிட்டு வீட்டிற்க்கு
வந்தான்
பசித்து வந்தவனுக்கோ
பரிமாறப் பட்டதென்னவோ
பருக்கைகள் மட்டுமே!
புரிந்து கொண்டான் அவன் பாரதியை!
உண்ணும் அளவு ஒன்று
என்பதினால் தானோ அன்று
பாரதி சொன்னான்
காக்கைக் குருவி எங்கள் ஜாதியென்று.!

வாக்காளர்கள்.

பசித்த நேரத்தில்
மட்டுமே வந்து போகும்
நாத்திக பக்தர்களுக்கு
இரத்தின கம்பளம்
விரித்து வரவேற்கும்
கோயில்கள்.

கஷ்டம் தெரிந்தும்
கூடலை இரந்து
கருவைப் பெற்ற
கர்ப்பப்பைகள்.
பிறந்தவன்
நர(க) அசுரன்
என்று தெரிந்திருந்தும்
பூரித்துப் போகும்
பூமா தேவிகள்.!


கிழித்த இடத்தில்
வழிந்த இரத்தம்
விழியில் பட்டு
சிவந்து போனால்
சிம்மாசனம் தூளெனப்
புரிந்த ஊசி
விழியோடு இமையைத்
தைத்த போதும்
சுகித்துக் கொண்டிருக்கும்
சுக போகிகள்.

கண்ணைத் தைத்தவன்
கடவுள் என்று
கோயில் கட்டும்
பெரிய சோழர்கள்!

Saturday, June 21, 2008

சுழற்சி

பயணம் போகும்
பூமியில்
புழுங்கிக் கொண்டிருக்கும்
ஜீவன்களுக்கு மத்தியில்
நானும்
எவையெவையையோ
தேடிக் கொண்டு ... !

விடைகள் எல்லாம்
விஞ்ஞான விதானத்தின்
விளிம்பில் ...

விஞ்ஞானத்திற்கும்
மெஞ்ஞானத்திற்கும்
மத்தியில்
சமூகம்
அஞ்ஞானத்தில்
விசனப்பட்டுக் கொண்டிருக்கிறது.

விசனத்தில்
விக்கித் தவிக்கும்
இச்சமூக
வியாபரக் களத்தில்
மனிதம் விற்கப்பட்டு
மிருகம் வாங்கப் படுகிறது.
அதுவும்
அஜீரண விலையில் ...!

இங்கே
உணர்வுகள் ஊனங்களாய் .. !
உரிமைகள் ஊமைகளாய் ... !
எனில் ...
விடைகள் எங்கே ... ?

விடியலிலா.. . ?

ஆனால் விடியல். .. ?

இங்கே
அடிமைக் குரலுக்கும்
உரிமைக் குரலுக்கும்
நடுவில்
எத்தனையெத்தனை
தலைமுறையிடைவெளிகள் ... !

எனினும்
சந்தடிச் சாக்கில்
வந்து போகும்
இருள் வான மின்னலென
அவ்வப்போது
மனிதம் விரும்பிகள் ..

இந்த சுதந்திரச் சமூகத்தின்
வசந்த காலங்கள்...!

வற்றாத ஜீவநதி

காதலாய் காலம் செல்ல
குதிரையாய் மனசும் தாவி
காமமாய் காதல் பேசி
பூதமாய் பிரிவை நினைக்க
மாயமாய் பின்னர் உணர்த்தி
போர்வையாய் போன மரபை
சிறிதே விலக்கச் சொல்லி
ஜோதியாய் அறிவை மாற்றி
போதியாய் நகருது ஆறு.!

Wednesday, June 4, 2008

முகம்

இன்முகம் மட்டும் காட்டி
இனிப்பாய் வார்த்தை பேசி
உள்மனம் மூடி வைத்து
கசப்பை அதிலே தேக்கி
விசமாய் கொட்டித் தீர்க்கும்
மனிதராய் பெயர் சொல்லிடும்
எவர்க்குமே சுயமாய் இங்கே
முகமென்று ஒன்று இல்லை!
முகவரி மட்டும் இங்கே
அழகாய் இருந்து விட்டு
உள்ளுறை வார்த்தை யெல்லாம்
அழுக்காய் போன தென்ன ?
குரங்கு கூட்டம் கூட
வஞ்சனை சிறிதும் இன்றி
வனப்புடன் வாழும் போது
மானிடம் மட்டும் ஏன்
வஞ்சனை தாங்க லாச்சு?
சிந்தனை சிறிதும் இன்றி
செயல்பட திறனும் இன்றி
வஞ்சனை ஒன்றை தவிர
மானிடம் வேறறிந்த தில்லை!
வஞ்சனை கொண்ட வர்க்கு
மோதிட எண்ணம் தோன்ற
நேரிடையாய் மோதிக் கொள்ள
சுயமாய் முகமொன்று இல்லை!
சீறிச்சினந்து கொள்ள இவர்
பாம்புமுகம் படைத்தா ரில்லை!
பதுங்கி பாய்ந்து தாக்க
புலிமுகம் கொண்டா ரில்லை!
நிழலாய் கொண்ட முகங்கள்
நிதர்சனமாய் ஆவ தில்லை!
இதனை புரிந்து விடின்

மனிதரில் மிருகம் இல்லை

Friday, May 30, 2008

சப்தமாய் ஒரு மௌனம்

தற்செயலாய்
உன் நினைவு வர
நீ எதிரே நிற்கிறாய்!

நான் எல்லாவற்றையும்
விசாரித்துவிட்டு
உன்னையும் மெல்ல
விசாரிக்கிறேன்.
நீ எப்போதும் போல
மௌனியாய் நிற்கிறாய்!

வார்த்தைகள் பேசாதவற்றை
மௌனம் பேசுமாம்.
எங்கோ படித்திருக்கிறேன்
இங்கே அனுபவிக்கிறேன்.

நீ
எல்லாம் சொல்கிறாய்
உன் ஒற்றை
மௌனத்தால்.

உன் மௌனம்
துரோணரின் சக்கர வியூகம்!
நான் சாதாரண அபிமன்யு!
உடைத்து உள்ளே போனவன்
மீண்டு வரமுடியாமல்..... !


உரக்கப் பேசியவர்கள்
பேச்சுடனே போய்விட
உன்னுடைய
உரத்த மௌனம் -

என்னை உலுக்கிவிட்டதடி !

Tuesday, May 27, 2008

நீங்கா நினைவுகள்.

உனக்கு ஞாபகம் உண்டா .. ?

முன்னும் பின்னுமறியாது
முழுக்க முழுக்கவொரு
புதுவுலகில்
என்னையும்
தொடர்பாய் உன்னையும்
அழுத்தி வைத்த – அந்த
அலுவலக நாட்கள் ...

அலுவலகம் முடிந்து
அவரவர் தான் நீங்க
நீயும் நானும்
எவையெவையோயெல்லாம்
பேசித் தீர்க்க நினைத்த
ஐ.நா பிரச்சனைகள் –

நேரில் பேச முடியாத போதெல்லாம்
தாளில் பேச – பின்னும்
தாளாப் பிரச்சனைகளில்
நம்மை அழுத்திக் கொண்ட – அந்த
அழுத்தமான நாட்கள் ...

இவையெல்லாம்
இன்னும் நினைவில் – இந்த
ஐம்பதாம் வயதிலும் ...!

இப்போது நீ
வந்தால்...
உன்னால்
என்னை அடையாளம்
கொள்ள முடியுமா... ?

மங்கிய விழிகளும் - அதனை
மறைக்கத் துடிக்கும்
மூக்குக் கண்ணாடியும்
நரைத்த முடிகளும்
நைந்து போன நரம்புகளும் -

வயோதிகத்தின் விளிம்பில்
மரணத்தை எதிர்நோக்கி
வாசலில் நின்ற போதும்
நீங்காதிருப்பவை – இன்னும்
நினைவுகள் மட்டுமே...!

Wednesday, May 21, 2008

மனித மீறல்கள்

என்னைக் கொஞ்சம்
அழவிடுங்கள்!
சற்றே தனிமையாயிருக்க – ஒரு
சுற்று விலகியிருங்கள்!
தனியாய் நான்
கொஞ்சம் அழவிடுங்கள்!


அலையடங்கின குளமாய்...!
ஆசையடங்கின ஜடமாய் ...!


அழகற்ற உங்களின்
ஆறுதல் வார்த்தைகளை
தள்ளி வைத்துவிட்டு
என்னைத்
தனியே விடுங்கள்!
நான் கொஞ்சம்
அழவேண்டும்!


அலையடங்கின குளமாய்...!
ஆசையடங்கின ஜடமாய் ...!


என்னுடைய துக்கம்
என்னுள்ளேயே புதைந்திடட்டும்! வெளியே விதைத்து
புதராய் மாறி
என்னையே புதைப்பதைவிட
அது
என்னுள்ளேயே புதைந்திடட்டும்! அதற்காகவேணும் அருகாதீர்!
அமைதியாய்
என்னைக் அழவிடுங்கள்!


அலையடங்கின குளமாய்...!
ஆசையடங்கின ஜடமாய் ...!


உங்களின்
மனிதமற்ற மனங்களும்
நேயமற்ற நிகழ்வுகளும்
என்னைக் காயப் படுத்தியது போதும்!
நடந்து போன நிகழ்வுகளுக்காய்
நிதானமாய் கொஞ்சம்
அழவேண்டும்!

அலையடங்கின குளமாய்...!
ஆசையடங்கின ஜடமாய் ...!


நாங்கள் சந்தோஷித்த போது
துக்கித்த உங்களுக்காக
நீங்கள் சந்தோஷிக்க
நான் துக்கமாய் கொஞ்சம்
அழவேண்டும்!

அலையடங்கின குளமாய்...!
ஆசையடங்கின ஜடமாய் ...!


ஒரு இராம கோயிலுக்காக
ஒரு மசூதியையும்
ஒட்டு மொத்த
மனித நேயத்தையும்
மடிய வைத்த - உங்களின்
மனிதமற்ற செய்கைக்காக
மனதார அழவேண்டும்!

அலையடங்கின குளமாய்...!
ஆசையடங்கின ஜடமாய் ...!


(பின் குறிப்பு: இந்த கவிதை பாபர் மசூதி இடிக்கப் பட்ட போது எழுதப் பட்டது.)

Sunday, May 18, 2008

உடம்பு சரியில்லாத நண்பரும்.., லேடி டாக்டரும் ...!

மெய்யாகிய பொய்
சுட்டெரித்தது
சூரியனை...!

நிலா
காயத்தினை
காதால் பார்த்து
காயம் தேடியது.

நிலவுக் கை
நாடி வருடியதில்
சூரியக் கண் நாணி
சுவர் தேடியது... !

அங்கே
அறையப் பட்டிருந்த
சிலுவையில்
வடிக்கப் பட்டிருந்தது
பூ
தலையில்
இலைக் கிரீடத்துடன் .. கூடவே
கெப்ளர்
எண்ணாலும் எழுத்தாலும்
மெய்ப்பிக்கப் பட்டிருந்தான்!

சூரியனை
சிற்றெறும்பு கடித்த போது
நிலா பக்கத்தில்
நின்று சிரித்தது ..!

சந்தா ரசீதாகியது
மருந்துச் சீட்டு.!

விடை தருகிறேன்

எனக்கென்று நீயும்
உனக்கென்று நானுமாய்
நமக்கு நாமாய்
வகுத்துக் கொண்ட
வாழ்க்கைப் பாதையில்
நீ மட்டும் ஏன்
வழுக்கிப் போய்விட்டாய் ... ?

என் சோகத்தை
என் முகத்தில் பூத்த முட்களும்
பேனா சிந்திய இரத்தங்களுமே
பிரதிபலிக்கின்றனவேயன்றி
உதடுகள்
உச்சரித்ததில்லை .. !
உன் பதிலின்றி
பார்வையின்றி
பூத்து குலுங்க வேண்டிய
இந்த மலர்
முகாரிச் சோகத்திற்குள்
முகம் புதைத்துக் கொண்டிருக்கிறது..!

ஒருமுறை வந்து
முகம் காட்டிவிட்டுப் போ!
உன் கண்கள் குளத்தில்
கவிதை முத்தெடுத்து
காதலோடு தொடுத்து
என் சோகத்திற்குக்
கொடுத்துவிட்டு
என்னை பிரிய
விடை தருகிறேன்!

கவிதை வேதம்.

புவி பார்த்து விழி புணரும்;
மனதில் நுழைந்து கருவாய் தங்கும்;
உயிரின் வாசல் கவிதை பிரசவிக்கும்;
புவி கேட்டு பரவச மடையும்;
கவிதை புரியாதோர் கல்வி யிலாதோர்;
அகம் புரியாது புறம் பேசும்
அகந்தை கொண்ட அறிவிலி மாந்தர்
மனதில் அறைய பிறந்த கவிதை
உலகம் பேச உன்னதம் ஆகும்;
வரி வடிவில் வாழ்ந்து நிற்கும்;
வானம் வந்து வாழ்த்திச் செல்லும்;
வாழ்க்கை வந்து வழக்கை சொல்லும்
பேனா நிமிர்ந்து தீர்ப்பை எழுதும்;
அகந்தை தாங்கும் அறிவிலிக் கூட்டம்
வார்த்தை முன்னே வலு விழக்கும்;
வார்த்தை முன்னே வலு விழந்தோர்
வாழ்க்கை முன்னா நிற்கக் கூடும்.. ?
தீர்ப்பைச் சொல்லும் சிறந்த கவிதை
அரசில் ஏறி ஆட்சி செய்யும்;
செவ்வேல் தாங்கி இராட்சசம் அழிக்கும்;
மனிதம் சிறக்க சிலுவை சுமக்கும்;
குற்றம் தவிர்க்கும் குரானாய் நிற்கும்;
கவிதை புரியும் செந்நிலை அரசில்
மதங்க ளில்லை குலங்க ளில்லை;
மானுடம் மட்டும் மகத்துவ மாகும்;
மானுடம் வாழ வாழ்ந்திடும் கவிதை
நாளைய உலகின் வேதம் வேதம்!

Tuesday, April 8, 2008

நீ ... நான் ... மௌனம் ...


உனக்கும் எனக்கும்
மத்தியில் நிற்கும்
மௌனக் கோட்டை
தகர்த்து
எப்பொழுது என்னை
முழுமையாக
ஆட்கொள்ளப் போகிறாய் ... ?

மனம் அறுத்துப் போகும்
மௌனம் தவிர்த்து
பொய்யாய் கொண்ட
முகத்திரை களைந்து ...
நிஜங்களை எப்பொழுது
நிதர்சனமாக்கப் போகிறாய் ... ?

பதில் தெரியாத
கேள்விகளின்
இருள்மையில் மூழ்கும் நம்மை
நமது மௌனம் ...
சாளர ஓட்டை
நிலவொளியாய்
காத்து நிற்கட்டும் ... !
அதற்காகவேணும் நாம்
மௌனம் கொண்டாடலாம் !

கற்பிதங்கள்



கர்ப்பத்திலிருந்தே தொடங்குகின்றன
நமக்கான கற்பிதங்கள் .....
பிரகலாத போதங்களும்
அபிமன்யு அற்புதங்களும்...!
நாம் கொண்ட கற்பிதங்களும்
துன்பங்களின் முடிவோடு...!
சுயமாய் என்ன கற்றுக் கொண்டோம்
கற்றுத் தருவதற்கு ... ?
வேட்டையாடவும் ...
வேட்டையாடப் படாமலும்
இருப்பதற்கே
எல்லா கற்பிதங்களும் ..
கற்பிதங்களின் விளைவுகளெல்லாம் ..
“ சர்வம் தர்க்கம் மயம்” !

Thursday, April 3, 2008

ஜாடி


அடியில் நீராய்
மனதில் ஆசை ..!
கண்கள் வீச்சில்
கற்கள் போட
காதல் பொங்கி
நிறைந்த வேளை
தாகம் தீர்ந்த
காகமாய் அவள்....
கண்ணீர் மிஞ்சிய
ஜாடியாய் நான்.
(பி.கு: 1991-ஆம் ஆண்டு எரிதழல் என்ற கையெழுத்துப் பிரதியில் வெளியான என் கவிதை. இந்த கையெழுத்துப் பிரதி திருநெல்வேலி, வண்ணார்பேட்டை கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில், திரு. ப.கிருபாகரன் அவர்கள் ஆசிரியராக இருந்து மாதந்தோறும் வெளியிடப்பட்டது.)

Monday, March 31, 2008

எஞ்ஞான்றும் புதிது உலகு...


தோட்டத்திலிருந்த
முருங்கை மரக் கிளைகளில்
மேலும் கீழுமாய்
பறந்து விழுந்து பறந்தபடியாய்
முயங்கிக் கொண்டிருந்தன
அந்த ஜோடிக் குருவிகள்....

முந்தைய முட்டையிடலின்
வலிமிகுந்த அனுபவ சாயலோ
அந்த அடைகாத்தலில்
அடைந்த வேதனை
நினைவுகளோ இன்றி
தேவையையே மட்டுமே
குறிக்கோளாய் இருந்தன அவை...

முன்பொரு தடவை
அந்த பெட்டைக் குருவி
முட்டையிடும் அவசரத்தில்
கூட்டையடையும் முன்பே
பறந்து கொண்டிருக்கும் போதே
இட்ட முட்டை
கீழே விழுந்து உடைந்து போனது
அநாவசியமாய்
என் நினைவிற்கு வந்து போனதை
அறியாமல் ஆனந்தமாய்
ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன...

எஞ்ஞான்றும் புதிது உலகு...
மனித நினைவுகள் தவிர்த்து....

Tuesday, March 18, 2008

வாழ்க்கை

கவிதைக்காய்க் காத்திருந்து
கற்பனைகள் பல செய்து
காகிதத்தில் விதையூன்ற ...

வரிகளுக்கும் வார்த்தைகளுக்குமான
சண்டையில்
நவீன ஓவியமாகிப் போயிற்று...

பார்த்தவன் சொல்லிப் போனான்
அழகான கவிதையாய்
ஓவியமாகியிருக்கிறதென ....

வெறுத்துப் போய்
நிரந்தர ஓவியனானேன்.

Saturday, March 15, 2008

ஞானம் பிறந்த கதை .....

ஒளியும் ஒளியின்மையுமான
பெருவெளியில்
அதனதன் தன்மை நிறுத்து...
காலம் நிறுத்து ...
அதன் தொடர்பாய் ....
வாழ்க்கை வரையறுத்த
வழக்குகள் வலிகொடுக்க...
இனங்கள் பெருக்கி...
பெருக்கிய இனங்கள் மேய்த்து .....
மேய்த்த இனங்களுக்கு
மேய்க்கவும் ... மேய்க்கப் படவும் ...
கற்றுத் தந்து ...
போதமைகளின் நிலையாமையும்
போதங்களின் போதமின்மையும்
இருப்பை கிழிக்க .....
கந்தல் வாழ்க்கை வாழக் காரணம் தேட ....

ஆறாம் அறிவு அட்டர் வேஸ்ட்.

என் கவிதை ....

வாழ்க்கை தன்
வழக்குகளால்
என் சிறகழிக்கும்...
உள்ளேற்றி வைத்த
அக்னிக் குஞ்சு
தன் பங்காய் என்னை
எரித்தொழிக்கும்....
இருப்பினும் ....
எரிந்து விழுந்த
என் சாம்பலிலிருந்தும்
மீண்டும் பிறக்கும்
ஃபீனிக்ஸ் பறவையாய்
என் கவிதை .....