Monday, March 31, 2008

எஞ்ஞான்றும் புதிது உலகு...


தோட்டத்திலிருந்த
முருங்கை மரக் கிளைகளில்
மேலும் கீழுமாய்
பறந்து விழுந்து பறந்தபடியாய்
முயங்கிக் கொண்டிருந்தன
அந்த ஜோடிக் குருவிகள்....

முந்தைய முட்டையிடலின்
வலிமிகுந்த அனுபவ சாயலோ
அந்த அடைகாத்தலில்
அடைந்த வேதனை
நினைவுகளோ இன்றி
தேவையையே மட்டுமே
குறிக்கோளாய் இருந்தன அவை...

முன்பொரு தடவை
அந்த பெட்டைக் குருவி
முட்டையிடும் அவசரத்தில்
கூட்டையடையும் முன்பே
பறந்து கொண்டிருக்கும் போதே
இட்ட முட்டை
கீழே விழுந்து உடைந்து போனது
அநாவசியமாய்
என் நினைவிற்கு வந்து போனதை
அறியாமல் ஆனந்தமாய்
ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன...

எஞ்ஞான்றும் புதிது உலகு...
மனித நினைவுகள் தவிர்த்து....

No comments: